திமுகவில் முக்கிய பிரமுகர் நீக்கம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 9, 2023, 12:53 PM IST
Highlights

மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயச்சந்திரன் என்பவர் வெற்றி பெற்றவர். இவர் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயச்சந்திரன் என்பவர் வெற்றி பெற்றவர். இவர் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், மதுரை சூர்யா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( 64) என்பவரிடம் திமுக கவுன்சிலர் ஜெயசந்திரன் 10 லட்சம் ரூபாய் நிலமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் திமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சம் ஏமாற்றியது உறுதியானது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெயசந்திரன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி மன்ற 62-வது வார்டு உறுப்பினர் க.ஜெயச்சந்திரன் கழகக்கட்டுபாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். நில மோசடி வழக்கில் மதுரை மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!