
இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள்ன. இதில் 8-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில், 14 வார்டுகளுக்கு மட்டும் கடந்த மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும்,பாஜக ஒரு வார்டிலும் வெற்றிப்பெற்றனர். இந்நிலையில் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிகளவு வார்டுகளில் வெற்றிபெற்ற திமுகவினர் அதிருப்தியடைந்ததாக் சொல்லபடுகிறது.
புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் க.கலாராணி பெயரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக முன்மொழிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், ஏமாற்றமடைந்த கலாராணி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். டிஎஸ்பி தேவராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். மேலும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை. நல்ல முடிவு வழங்கப்படவேண்டும் என கலாராணி தெரிவித்தார். இது போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.