"மாமன்றத்திற்கு நான் சிங்கிளா போறேன்".. " சிங்கமாத்தான் போறேன் ".. தெறிக்கவிட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..

Published : Mar 04, 2022, 04:04 PM IST
"மாமன்றத்திற்கு நான் சிங்கிளா போறேன்".. " சிங்கமாத்தான் போறேன் ".. தெறிக்கவிட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..

சுருக்கம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் முடிவுகள் 22 ஆம் தேதி வெளியானது, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே கைப்பற்றியது. அதில் அதிமுக படுதோல்வி அடைந்தது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் 15 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றது, இதில் எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக சார்பில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். 

சென்னை மாமன்றத்திற்கு  நான் தனியாக போகிறேன் என்பதைவிட ஒரு பெண் சிங்கமாக தான் போகிறேன் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியுள்ளார்.  தனது  பகுதியில் சாதி மதம் கடந்து தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் பாடுபடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில், பாஜக சார்பில் தனி ஆளாக உமா ஆனந்தன் மாமன்றத்திற்கு செல்ல உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் முடிவுகள் 22 ஆம் தேதி வெளியானது, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே கைப்பற்றியது. அதில் அதிமுக படுதோல்வி அடைந்தது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் 15 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றது, இதில் எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக சார்பில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். இது பாஜகவுக்கு கிடைத்த பெரிய வெற்றியான அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுதும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் முறையாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். பதவியேற்பின் போது கவுன்சிலர்கள் அந்தந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான பெயர்களை கூறி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில் வார்டு எண் 134 ல் போட்டியிட்ட உமா ஆனந்தன் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் முன்னதாக கோட்சை குறித்து சர்ச்சையான கருத்துக்கள் கூறியவர் ஆவர். தான் ஒரு கோட்சேவின் மாணவர் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் படு தோல்வியை சந்திப்பார் என்று, பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அனைத்தையும் முறியடித்து அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அன்று தெய்வத்தின் அணுகிரகத்தால்தான் தான் வெற்றி பெற்றதாகவும், நான் நித்தம் வணங்கும் தில்லை அம்பலத்தானுக்கும், அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம் என்று சொல்லி பதவி ஏற்றார். கிட்டத்தட்ட சென்னை மாநகராட்சியில் 153 திமுக கவுன்சிலர்களையும் மற்றும் அவர்களது கூட்டணியான காங்கிரஸ் கட்சி13 கவுன்சிலர்களையும் வைத்துள்ளது. மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தல 4 கவுன்சிலர்களையும், அதிமுக இரண்டு கவுன்சிலர்களையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர்களே அதிகமானோர் உள்ளனர்.  

இந்நிலையில் பாஜக சார்பில் சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்படும் உமா ஆனந்தன் மாமன்றத்திற்கு தனி ஆளாக நுழைய உள்ளார். இது அவருக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கவுன்சிலர்களை எதிர்த்து அவர் மாமன்றத்தில் செயல்படுவது என்பது கடினமாக காரியம் ஆகும். எனவே மாமன்றத்தில் உமா ஆனந்தனின் குரல் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் தனது வெற்றி குறித்தும், எதிர்காலத்தில் தனது பகுதி மக்களுக்கு தான் பணியாற்ற உள்ளது குறித்தும் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கு வாக்களித்தவர்களுடன் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து சாதி,  மதம் கடந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார். அவர் கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு :- 

பாஜகவில் உள்ள பலபேரின் பிரார்த்தனையால் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன், அதிமுக திமுகவுக்கு மாற்றாக ஒருவர் வேண்டும் என்பதற்காகதான் மக்கள் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.  நான் முழுக்க முழுக்க எச்.ராஜா அவர்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கும் நபர். நான் எப்போது பேசியதை வைத்துக் கொண்டு என்னை கேட்சேவின் பேத்தி என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோட்டே காந்தியை சுட்டார் உடனே சரண்டர் ஆகிவிட்டார். ஆனால் இவர்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை  தீவிரவாதத்திற்கு ஆதரவானவர்கள் என்று நான் கூறலாமா? எனது வார்டை பொறுத்தவரையில் எனக்கு பல்வேறு சமூக மக்கள் சாதி மதம் கடந்து வாக்களித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் நான் தற்போது அந்த வார்டின் கவுன்சிலர் என்ற முறையில் எந்த பேதமும் இல்லாமல் அனைவருக்கும் சேவை செய்வேன், தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக-திமுக அதாவது இரட்டை இலை உதயசூரியன் சின்னம் மக்கள் மனதில் பதிந்து போய் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி தான் இப்போது பாஜகவின் வேட்பாளராக நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அன்று வெற்றி பெற்ற போது கூட கவுன்சிலர் பதவியில் மகத்துவத்தை நான் உணரவில்லை, பிறகுதான் என்னை பலரும் பாராட்டும் போது அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து மகிழ்கிறேன். இந்தநிலையில்தான் ஒருவர் என்னை  பாஜக சார்பில் ஒற்றை ஆளாக மன்றத்திற்குள் நுழைகிறீர்களே என்று கேட்டார். 

நான் ஒற்றை ஆளாக போகிறேன்தான் அதே நேரத்தில் நான் சிங்கமாகதான் போகிறேன், பெண் சிங்கமாக போகிறேன், பெண் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல நான் தனியாக செல்கிறேன், எப்போதும் பெண் சிங்கம்தான் வேட்டையாடும் என்பதை மறந்து விடக்கூடாது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன், எனது பகுதிக்கு என்ன தேவையோ அதை நான் கேட்டு பெறுவேன், முதல்வரிடமே அதைக் கேட்டுப் பெறுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு... சீர்காழியில் முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் தேர்தல் பிரச்சாரம்!
Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!