2024-ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராவோம்... 18 கட்சிகளின் கூட்டத்தில் அதிரடியாக அறிவித்த சோனியா.!

By Asianet TamilFirst Published Aug 20, 2021, 9:54 PM IST
Highlights

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றை எண்ணத்துடன் எதிர்கொள்ள இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 18 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசை நம் நாட்டுக்கு நாம் வழங்கட வேண்டும். அதற்கு ஒற்றை எண்ணத்துடன் கூடிய திட்டத்தை தற்போதே தொடங்க வேண்டும். இது மிகப்பெரிய சவால். என்றாலும், ஒன்றாக இணைந்து பணியாற்ற இதைவிட மாற்று இல்லை. 
நமக்கிடையே வெவ்வேறு கட்டாயங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து நாட்டின் நலனுக்காக ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். அதுபோலவே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா விஷயத்தில், 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு செய்த தவறை திருத்த வைத்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்த இந்த ஒற்றுமை வருங்காலத்திலும் நீடிக்க வேண்டும். குறிப்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்த வேண்டிய போராட்டத்திலும் தொடர வேண்டும்.” என்று சோனியா காந்தி பேசினார். இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
 

click me!