
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் ஓபிஎஸ் தரப்பு எம்.பி. மைத்ரேயனை பேசுவதற்கு அவைத் துணைத் தலைவர் குரியன் அனுமதி அளித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பேசிய மைத்ரேயன், அவர் அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 22 ம் தேதி காய்ச்சல் மற்றும் நீரிழப்பு என மட்டும் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.
ஆனால் அண்மையில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துமனையின் இந்த இரு அறிக்கைகளில் முரண்பாடு இருக்கிறது.இதே போன்று பல மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மைத்ரேயன் பேசிக் கொண்ருந்தபோது சசிகலா தரப்பு எம்பி விஜிலா சத்யானந்த் எழுந்து அவரை பேசவிடாமல் கடுமையாக கூச்சலிட்டார். அவரை அமருமாறு குரியன் பல முறை கேட்டுக் கொண்டும் தொடர்ந்து அவர் கூச்சலிட்டதால் கோபமடைந்த குரியன் மிகக் கடுமையாக எச்சரித்தார்.
நீங்கள் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டு இப்படி கூச்சலிடுகிறீர்களே என எச்சரித்தார். மீண்டும் அவர் மைத்ரேயனையும், குரியனையும் பேசவிடாமல் கூச்சலிட்டதால் கடுப்பான குரியன், உங்கள் மீது அவை நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என மிகக் கடுமையான எச்சரித்தார்.
அவையை நடத்துவது குறித்து முடிவு செய்ய நீங்கள் யார் விஜிலா? என அவர் கேள்வி எழுப்பியபோது அவையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வாயடைத்துபோய் அமர்ந்திருந்தனர்.
இவ்வளவு கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு விஜிலா அமைதியானார். அப்போது பேசிய குரியன், விஜிலா நீங்கள் என் தங்கையைப் போன்றவர்..இப்படி எல்லாம் கூச்சலிடுவது மாநிலங்களவையின் மாண்பை குலைக்கும் வகையில் இருக்கும் என்பதால் இது போன்று இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டார்.