2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றதையடுத்து, அடுத்தடுத்த நிகழ்ந்த மரணங்கள் ஒரு திர்ல்லர் கிரைம் ஹாலிவுட் படம் பார்ப்பது போல் தான் இருந்தது.
கொடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று எஸ்டேட் பங்குதாரரான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு வழக்கில் இதுவரை நடத்துள்ள சம்பவங்கள் ஒரு பார்வை..
கொடநாடு பங்களா:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் கடந்த 1991-96 ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டின் சொத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்த கொடநாடு பங்களா ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையிலும் அதிமுகவிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஏனெனில் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் பல்வேறு முக்கிய முடிவுகளை இங்கிருந்தபடியே ஜெயலலிதா எடுத்திருக்கிறார்.
கொலை மற்றும் கொள்ளை வழக்கு:
அதிமுகவில் முக்கிய ரோல் ஆற்றிய கொடநாடு பங்களா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பங்களாவில் கூலிபடை ஒன்று நுழைந்து கொள்ளையில் ஈடுப்பட்டது. மேலும் அதற்கடுத்தடுத்து நடைபெற்ற மரணங்கள் அரசியல் தளத்தில் பல்வேறு யூகங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில், இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக இருந்தார்.
அடுத்தடுத்த மரணங்கள்:
இந்தச் சம்பவத்தின்போது எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மேலும் அங்கிருந்த கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றபட்டது. கொடநாடு எஸ்டேட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல் முக்கிய ஆவணங்கள் திருட்டப்பட்டதாக குற்றச்சாட்டப்படுகிறது. இதற்கடுத்து நடைபெற்ற சம்பவங்கள் அனைத்து ஒரு கிரைம் திரில்லர் சினிமா பார்ப்பது போல் தான் இருந்தது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட கனகராஜ் என்பவர், ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். அவர் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் என்பவர் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்தனர். சயான் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மேத்யூ சாமுவேல் பேட்டி:
வாளையார் மனோஜ், சயான் உட்பட 10 பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை மூன்று ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு தெகல்ஹா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பேட்டியில், சயானும் அவரது நண்பருமான வாளையார் மனோஜும் கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர். இதற்காக, சயான், மனோஜ், மேத்யூ சாமுவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ளது. எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின் விபத்தில் இறந்த கனகராஜ் சகோதரர் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர். பின்னர், தற்கொலை செய்துக்கொண்ட தினேஷ் வீட்டாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திமுக ஆட்சி- மறு விசாரணை:
அது போக, எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விசாரணை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையும், கோவையில் 2 முறையும் வைத்து விசாரணை நடைபெற்றது. சிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று கொடநாடு எஸ்டேட் பங்குதாரரான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.சிகலா இல்லத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தனிப்படை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.