சிவகங்கை மாவட்டம் கீழடியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின்போது தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மூடப்பட்டு வருவதற்கு திமுக எம்.பி.கனிமொழி, சுப.வீர பாண்டியன் உள்ளிட்டடோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2300 ஆணடுகள் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பள்ளிச் சந்தை புதூர் பகுதியில் தென்னந்தோப்புக்குள் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த கடந்த 2015 மார்ச் முதல் செப்டம்பர் வரை நடைபெற்றன. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில், பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள், ரோமானிய மண் பாண்டப் பொருள்கள், வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததற்கான அணிகலன்கள் உள்பட சுமார் 5,300 பொருள்கள் கிடைத்தன.
இரண்டாம் கட்டப் பணிகள் 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடைபெற்றன.
2-ஆம் கட்ட பணிகள் முடிந்த பின்னர், அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், அகழாய்வில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, ஸ்ரீ ராமன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமன், துணை கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த அகழ்வாராய்ச்சியின்போது பழங்கால பொருட்கள் ஏதும் கிடைக்காததால், அந்த ஆராய்ச்சிக்காக தொண்டப்பட்ட குழிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும், பண்பாட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தொடக்கத்தில் இருந்தே இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக எம்.பி.கனிமொழி, மொகஞ்சதாரோஇ ஹரப்பா போன்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் கூட இன்றும் அப்படியே உள்ள நிலையில் கீழடி குழிகளை மூட வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போன்று கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு சமாதி கட்ட மத்திய அரசு முயன்று வருவதாக பண்பாட்டு ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.