
மதுரை
டெங்குவை விட மோசமானது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவை பங்கமாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாள்ரகளுக்கு பேட்டியளித்தார். அதில், “அதிமுகவை கட்டிக் காப்பதுதான் எங்களது பணி. அமைச்சர் என்ற பொறுப்பில், ஒரு முதலமைச்சரின் கீழ் பணியாற்றுகிறேன். எனவே, என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது.
நான் வெறும் ராஜூவாக இருந்தால், வெளிப்படையாக அனைத்தையும் பேசுவேன். அதிமுக-வை இன்று வழிநடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இருக்கிறது.
எனக்கு எத்தனையோ விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளையாக இருக்கிறேன்.
இந்தநேரத்தில் அமைதியாகக் கட்சியை வழிநடத்த வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு சசிகலா பாடுபட்டு இருக்கிறார். அதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. அந்தக் கருத்தை மாற்றிக் கொள்பவனும் நான் இல்லை.
இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் எடுக்கின்ற நடவடிக்கைக்கு என்னுடைய கருத்துகள் பாதகமாக எந்த வகையிலும் இருக்க கூடாது.
அதிமுகவை கூறுபோட வேண்டும் என்று கருணாநிதி வழியில் அவரது மகன் ஸ்டாலினும் புறப்பட்டிருக்கிறார். அதிமுகவில் இருக்கிற ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒரு குடையில் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். இலவசமாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. டெங்கு பரவும் வேகத்தை விட, சுனாமி வேகத்தில் அதனை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
டெங்குவை விட மோசமானது திமுக அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது மக்கள் பணி செய்வார்கள். ஆளுங்கட்சியானவுடம் மக்களை மறந்து விடுவார்கள். அப்படிப்பட்ட திமுக இனி வரக் கூடாது. ஜெயலலிதாவின் எண்ணப்படி, 100 ஆண்டுகள் தொடர்ந்து நல்லாட்சி தருவோம்” என்று அவர் தெரிவித்தார்.