தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததற்கு கருணாநிதியின் நல்லாட்சிதான் காரணம்... அண்டை மாநில மாஜி முதல்வர் சர்டிபிகேட்..!

By Asianet TamilFirst Published Mar 27, 2021, 10:12 PM IST
Highlights

தமிழ் நாடு வளர்ச்சிக்கு அடைந்ததற்கு கருணாநிதியின் நல்லாட்சியே காரணம் என்று ஓசூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கர்நாடகம் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசுகையில், “திராவிடர்களின் முன்னேற்றத்துக்காக உருவானதே திமுக. அண்ணாதுரையைத் தொடர்ந்து நீண்ட காலம் முதல்வராக இருந்த கருணாநிதியின் நல்லாட்சியே தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். பாஜகவால் தென் இந்தியாவில் வளர முடியவில்லை. கர்நாடகாவில்கூட நேரடி தேர்தல் மூலமாக பாஜக ஆட்சிக்கு வரவில்லை. ‘ஆப்ரேஷன் கமலா’ என்ற புறவாசல் வழியாகத்தான் ஆட்சிக்கு வந்தது.
தமிழகத்தில் பாஜக வர வாய்ப்பு அளிக்காத தமிழக மக்களுக்கு கோடிகோடி வணக்கங்களை தெரிவிக்கிறேன். தற்போது அதிமுக தோளில் உட்கார்ந்துகொண்டு பாஜகவினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதற்கு நீங்கள் இடம் தரக்கூடாது. நீங்கள் அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். பாஜகவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும்  தமிழக மக்கள் வாக்களிக்காமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவிலேயே வரலாற்றில் அதிகமாக பொய் சொல்பவர் ஒருவர் உண்டு என்றால், அது மிஸ்டர் மோடி மட்டுமே. நாட்டில் பெட்ரோல் , டீசல், காஸ், காய்கறி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படியானால் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.” என்று சித்தராமையா பிரசாரம் செய்தார்.
 

click me!