விருதுநகர்
மக்களின் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் கமலும், ரஜினியும் முதலமைச்சர் பதவிக்கு மட்டுமே ஆசைப்படுகின்றனர் என்று சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் கடந்த 28-ஆம் தேதி முதல் ரூ.50 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்டவை விளையாடும் 250 அணிகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.
அவர்களுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பில் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளுக்கான பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த விளையாட்டு உபகரணங்களை எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்க பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன், "திராவிட கட்சிகள் தோன்றுவதற்கு முன்பாக ஒதுக்கி வைக்கப்பட்டு தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களை மீட்டவர் பெரியார். தற்போது அனைவரும் படித்து, நல்ல உடையணிந்து, இருக்கையில் அமர்வதற்கு அண்ணா, கருணாநிதி போன்றோரே காரணம்.
"அரசியலுக்கு வருவோம்" என தற்போது கூறிக் கொள்ளும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இதுவரை மக்களின் பிரச்சனையில் தலையிடவில்லை. இவர்கள் இருவரும் மக்களின் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் முதலமைச்சர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுகின்றனர்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட துணைச் செயலாளர் ராசா அருண்மொழி, நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கசாமி,
பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி மற்றும் பலர் பங்கேற்றனர்.