
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி
அனுமதிக்கப்பட்டார்.
அவர் 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த நாட்கள் முழுவதும் யாரும் மருத்துவமனைக்குள்
அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் உடல்நலம் தேறி வருவதாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இட்லி போன்ற உணவுகள்
உட்கொண்டார் எனவும் தகவல்களை வெளியிட்டனர். ஆனால், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா இறந்த நிலையில் மருத்துவமனையை விட்டு
வெளியே வந்தார்.
இதையடுத்து சசிகலாவிடம் பதவிக்காக சண்டை போட்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தத்தை
நடத்தி வந்தார்.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும், அவரால் நியமிக்கப்பட்ட டிடிவியை ஓரங்கட்டிவிட்டு ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக்
கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில்
விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் தலைவராக இன்று பொறுப்பேற்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓரிரு நாட்களிலேயே விசாரணையை நீதிபதி ஆறுமுகம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விவரம் தெரிந்தவர்கள் நீதிபதி ஆறுமுகத்திடம் தெரிவிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.