ஜெய்பீம் என்ற தலைப்பு வைத்ததே தவறு. படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கை குழு எப்படி அனுமதித்தது? என்று தெரியவில்லை.
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சமுதாய அமைப்புகள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சூர்யா நடித்து, தயாரித்துள்ள நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு பாராட்டுகள் கிடைத்தாலும் மற்றொருபுறம் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இப்படத்திற்கு எதிராக பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதன் வேகம் குறையாமல் இருக்க ஒவ்வொரு நாளும் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரைக்கலைஞர்கள், இயக்குனர்கள் கடந்த காலங்களில் கவன குறைவால், அல்லது புரிதல் இல்லாமல் செய்ததை பூதாகரமாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கும் போக்கு தொடங்கியுள்ளது. இவை அனைத்தும் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பாமகவிற்கு ஆதரவாக ஜெய் பீம் படத்தை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி குரல் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜெய்பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம். தேவையற்ற காட்சிகளை புகுத்தி ஜாதி, மதம், மொழி, மற்றும் இன ரீதியான மோதல்களை தூண்டிவிட முயன்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனின் பின்னணியில் மற்றொரு சமுதாயத்தில் அடையாளமாக வைக்கப்பட்டுள்ள அக்னிக்கலசம் காட்சிப்படுத்தப்பட்டது தவறு. உண்மைச் சம்பவத்தில் வரும் கிறிஸ்துவர் பெயரான ஆரோக்கியசாமி பதில் இன்னொரு மதத்தை சேர்ந்த பெயரான குருமூர்த்தி பெயர் வைக்கப்படுகிறது. உண்மை சம்பவம் என்றால் உண்மையான பெயரை தானே வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த படத்தில் இருளர் இன மக்களை காட்டும் போது, பிராமணர் போல ஒரு வழக்கறிஞரை காட்டி அவர் சிவ சிவ என்று சொல்லக்கூடியதை கிண்டல் மற்றும் கேலி செய்து இன பிரச்சனை தூண்டிவிடப்படுகிறது. ஆகையால் ஜெய் பீம் படத்தை தடை செய்ய வேண்டும். ஜெய்பீம் என்ற தலைப்பு வைத்ததே தவறு. படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கை குழு எப்படி அனுமதித்தது? என்று தெரியவில்லை.
அதேபோல், ராஜாகண்ணு விவகாரத்தில் வழக்கறிஞர் சந்துரு என்பவர் ஒரு பார்ட் தான் என்றும் மெயின் யாரோ அவர்களை ஏன் முன்னிலைப்படுத்தி இருக்கலாமே என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.