பூதாகரம் ஆகும் ஜெய்பீம் விவகாரம்… டிவிட்டரில் டிரென்ட் ஆகும் #SuriyaHatesVanniyars!! | JaiBhim

By Narendran SFirst Published Nov 21, 2021, 3:17 PM IST
Highlights

#JaiBhim | நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் #WeStandWithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்ட் ஆன நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வன்னிய சமூகத்தினர் தங்களுடைய கருத்துக்களை #SuriyaHatesVanniyars மற்றும் #AmazonStopHate என்ற ஹேஷ்டேக்குகளில் தெரிவித்து அதனை டிரென்ட் செய்து வருகின்றனர்.

ஜெய் பீம் திரைப்பட விவகாரம் நாளுக்கு நாள் வளர்ந்து பூதாகரமாகி உள்ளது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடத்தும் நிறுவனம் தயாரித்துள்ளது. பழங்குடி இன மக்கள் படும் துயரங்களை இப்படத்தில் காட்டியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்று திரைத்துறையினரும் ஊடகங்களும் பாராட்டிய நிலையில் இதில் சம்பந்தமில்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தவறாக சித்தரித்து காட்டியுள்ளதாக விமர்சனம் எழுந்தது. அதாவது இப்படத்தில் கொடூர குற்றவாளியாக வரும் காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயர் அந்தோணி சாமி ஆனால் படத்தில் குருமூர்த்தி என்று வைக்கபட்டிருக்கும். இந்த பெயரானது மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் என்றழைக்கப்படும் காடுவெட்டி குருவை குறிப்பிடுவதாக வன்னியர் சங்கமும், அந்த சமூக இளைஞர்களும் குற்றம் சாட்டினர். குருமூர்த்தி என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அவர் வன்னியர் என்பதை உறுதிசெய்யும் வகையில் அவரது வீட்டில் வன்னியர் சங்க காலண்டர் மாட்டப்பட்டுள்ளதையும் அவர்கள் ஆதாரமாக காட்டியிருந்தனர். இதன் பிறகு படத்தின் அந்த காட்சியிலிருந்து அக்னி கலச காலண்டர் நீக்கப்பட்டு லட்சுமி படம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மையை கொண்டுவர பாடுபட்ட அந்த பகுதி வன்னிய மக்களை எதிராளியாக சித்தரித்தது ஏன் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதே நேரத்தில் நடிகர் சூர்யா வன்னிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,இல்லையென்றால் 5 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு கிடைக்கும் இந்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என்றும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #WeStandWithSurya என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய ஆதரவு கருத்துக்களை தெரிவித்து டிரென்ட் செய்தனர்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், நடிகர் சூர்யாவை பணிய வைக்க வேண்டும் என்பதற்காகவும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் #SuriyaHatesVanniyars மற்றும் #AmazonStopHate என்ற ஹேஷ்டேக்குகளில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து தேசிய டிரென்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் எடுத்து செல்லப்பட்டுள்ளதால் மற்ற மாநிலத்தில் வாழும் அதே சமூகத்தை சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஜெய் பீம் பட விவகாரம் தேசிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

click me!