அம்மா உணவகத்தில் கலைஞர் புகைபடம் வைரல்.. இத்தோடு நிறுத்திகோங்க – அமைச்சர் கண்டனம்

By manimegalai aFirst Published Nov 21, 2021, 2:20 PM IST
Highlights

அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சியே என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை வைப்பத்தில் காட்டும் முனைப்பை, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் முன்வர வேண்டும் எனவும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது.குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டதால் மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

திமுக ஆட்சி வந்தவுடன் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா அல்லது கலைஞர் உணவகமெனும் பெயர் மாற்றபடுமா எனும் கேள்வி எழுப்பியது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகம் அதன் பெயரிலே தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார்.

 இந்நிலையில் மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர்பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி படமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த படம் சமுக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைபடத்தை வைத்து திட்டத்தை திசை திருப்புவது வீண் முயற்சியே என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திமுக அரசை கண்டித்தும், படத்தை வைப்பத்தில் காட்டும் முனைப்பை, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் முன்வர வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில் 2013-ம் ஆண்டு சென்னையில் அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர் என கூறியுள்ளார்

மேலும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள அம்மா உணவகத்திற்கு அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருபவர்களுக்கு கடந்த 6 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவதிலும், உணவு வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எளிய சாமானிய மக்களின் பசி தீர்க்கும் சேவையை தொடர தடை ஏற்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சி எனவும் அய்யாவின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள் எனத் தனது கடித்தில் தெரிவித்துள்ளார்.

 

click me!