பொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு! அவருக்கு திறமை போதாது என்கிறார் தங்கதமிழ்செல்வன்...

First Published Jun 18, 2018, 6:40 AM IST
Highlights
It was wrong to appoint Pollachi Jayaraman as deputy speaker says thangathamilsevan...


தேனி

துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் சாடினார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நான் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்துள்ளேன். 

எந்த தப்பும் செய்யாத எங்களுக்கு அநீதி கிடைக்கிறது. அரசுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதி கிடைக்கிறது. இது மாறுபட்ட தீர்ப்பு. 

நீதிமன்றங்கள் மத்திய, மாநில அரசின் சொல்படிதான் செயல்படுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். 

ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்யுங்கள்.

துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும். 

கட்சி தாவல் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மனம் திருந்தியதால் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் அவர் என்ன கடவுளா? பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் இப்போதுகூட ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகிறேன். என்னை கண்ட மக்கள் நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்று பாராட்டுகின்றனர். எங்களுக்கு உடனடியாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 

மக்கள் எத்தனை நாளைக்கு எம்.எல்.ஏ. இல்லாமல் இருப்பார்கள்? ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. எனவே, அந்த பிரச்சினைகளை தீர்க்க கண்டிப்பாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். 

எனவே, வேகமாக இடைத்தேர்தலை நடத்தி யாரையாவது ஒருவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது உள்ள அரசின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. எனவே, என் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து கொடுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

click me!