
தமிழினத்துக்காக போராடும் வைகோவை ‘தீவிரவாத சிந்தனை கொண்டவர்’ என சொல்லி மலேஷியாவுக்குள் அனுமதிக்க மறுத்த பிரதமர் ரசாக், ரஜினியை ‘தலைவர்’ என விளித்துள்ளதை தமிழகம் கொண்டாடவே கூடாது என கடுங்குரல் எழுந்துள்ளது.
நட்சத்திர கலைவிழாவுக்காக மலேஷியா சென்றுள்ளது ரஜினி, கமல் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திர பட்டாளம். ரஜினிக்கு அந்த நாட்டில் ஏற்கனவே ஏகபோக மரியாதை உண்டு. பிரதமர் நஜீப் ரசாக் ரஜினியை கொண்டாடுபவர். கபாலி ஷூட்டிங்குக்காக ரஜினி மலேஷியாவில் இருந்தபோது அந்த நாட்டின் சார்பாக படத்துக்கு ஃபைனான்ஸ்தான் செய்யவில்லை, மற்றபடி எல்லா உதவிகளையும் கொண்டு வந்து கொட்டினார்கள். அதிலும் பிரதமர் ரசாக் ரஜினியை சந்திப்பதையும், மகிழ்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
அதன் பிறகு சென்னை வந்திருந்த ரசாக், ரஜினியை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்தார். இப்படி கோலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகரை கொண்டாடி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் வைகோ விஷயத்தில் மட்டும் வேறு முகம் காட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன் வைகோ மலேஷியா சென்றபோது ஏர்போர்ட்டை தாண்டி அவரை அந்நாட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை அரசு. விடுதலைப்புலிகளுடனான அவரது இணக்கத்தை சுட்டிக்காட்டி அவரை சில மணிநேரங்கள் விசாரித்துவிட்டு, அப்படியே சென்னைக்கு திருப்பி அனுப்பியது.
தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது இந்த விவகாரம்.
இந்த நிலையில் மலேஷியாவில் நட்சத்திர கலை விழாவுக்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த், அந்த நாட்டின் பிரதமரை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் “It was great to meet Thalaiva @superstarrajini again today, this time in Malaysia. Enjoy your time here!” என்று கொண்டாட்டமாய் தன் ட்விட்டரில் சேதி தட்டியிருக்கிறார் பிரதமர் ரசாக்.
’ப்பார்றா! எங்க சூப்பர் ஸ்டார் மலேஷியாவின் பிரதமருக்கே தலைவனாயிட்டார்.’ என்று இதை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் ‘ஈழ தமிழினத்துக்காக குரல் கொடுக்கும் வைகோவை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பிய ரசாக்கை கொண்டாடாதீர்கள். நம் தேசத்துக்குள் அரசியல் தலைவரை தாழ்த்தி, ஒரு நடிகரை போற்றி, பிரிவினையை உருவாக்கும் ரசாக்கை ஒதுக்கித் தள்ளுங்கள்.” என்று கோரிக்கை வைக்கின்றனர் ஈழ ஆதரவாளர்கள்.
ஆனால் கண் மண் தெரியாத சந்தோஷத்திலிருக்கும் ரஜினி ரசிகர்களின் காதில் இதெல்லாம் விழவா போகிறது?