
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சசிகலா பரோலில் வந்த சமயம் 600 சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சிறையில் உள்ளார்.
இவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நடராஜனை பார்ப்பதற்காக சசிகலா கடந்த மாதம் 6ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிறை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அரசியல் ரீதியாக கூட யாரையும் பார்க்கக்கூடாது என விதிமுறை விதித்திருந்தது. வெளியே வந்த சசிகலா எந்த அரசியல் கட்சி பிரமுகர்களையும் சந்திக்காமல் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் சிறைக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் பல ஆவணங்களும் திடுக்கிடும் தகவல்களும் வெளியே வந்துள்ளன. அதாவது பரோலில் வெளியே வந்த சசிகலா ரகசியமாக தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது.
சசிகலா மற்றும் இளவரசி சேர்மனாக இருக்கும் நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் ஜெயா டிவி உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை ஏற்கனவே இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா மற்றும் மகன் விவேக் ஆகியோர் பெயர்களில் மாற்றி அமைத்துள்ளதாகவும் 5 நாளில் சசிகலா 600க்கும் மேற்பட்ட பத்திரங்களை பெயர் மாற்றம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் சென்னையிலுள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அதிகாரிகளை வரவழைத்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.