ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லையா.. அரசுக்கு கமல்ஹாசன் சரமாரி கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Apr 26, 2021, 4:30 PM IST
Highlights

ஆகவே ஸ்டெர்லைட் ஆலையை திறந்தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்க கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையை திறக்கலாம் என்று ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா? என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

கொரோனா பெரும் தொற்று தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள்  நேரிடுகிறது. உயிர் காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை. இதற்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழர், விடுதலை  சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. காரணம் எளிதானது. சுற்றுச்சூழலையும் சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆலை  மூடப்பட்டு ஆகவேண்டுமென்று போராட்ட களத்தில் நின்ற கட்சிகள் இவை. ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனுடைய தமிழகம் தற்போதைய தேவையில் நாளொன்றுக்கு 240 டன் ஆக்சிஜன், 1200 டன் ஆக்ஸிஜனை சேமித்து வைக்கும்  திறனும், வசதியும் தமிழகத்துக்கு உள்ளது. 

எந்த ஊரு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க முடியும், குஜராத்தில் பால் கூட்டுறவு சங்கம் வெறும் 72 மணி நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவி உற்பத்தியைத் தொடங்கியுள்ளது ஓர் எளிய உதாரணம்.  தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் திறனுடைய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் தொழில்துறையினர். இந்தியாவின் பல மாநிலங்கள் ஆட்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு எட்டியுள்ளன. உண்மையான பிரச்சனை, தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜனை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கான விநியோக வசதிகள் இல்லை என்பதே என்கிறார்கள் வல்லுநர்கள்.ஆகவே ஸ்டெர்லைட் ஆலையை திறந்தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்க கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையை திறக்கலாம் என்று ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. லாக்கவுனில் லட்சக்கணக்கானவர்கள் பட்டினி கிடந்த போதும், சாலைகளில் நடந்தே சென்று அடிப்பட்டு செத்த போதும்கூட கூட்டப்படாத அனைத்துக் கட்சிக் கூட்டம், ஸ்டெர்லைட்காக மட்டும் கூடுகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த 13 பேரின் குடும்பமும், சுற்றமும் இவர்களை மன்னிக்காது. ஒரு அவசரகால நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்  கொள்வதா?  திமுகவின் மகத்தான ஆட்சியில் தென்மாவட்டங்களில் நாளொன்றுக்கு 16 மணி நேர மின்வெட்டு நிலவியது. தென்மாவட்ட மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தது. தென்மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை. மின்சாரம் தேவைதான் ஆனால் கடல் வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் தொலைத்து தான் மின்சாரம் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. 

தமிழக அரசும், தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும், எதிர்காலத்தையும் மதித்து முடிவு  எடுத்திருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறோம், பெருந்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஷன் உற்பத்தி தேவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. தமிழகம் இத்தருணத்தில் தேசத்திற்கு கைகொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் அதே தூத்துக்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நடத்திய போராட்டத்தை பொருளிழக்கச் செய்யும் விதமாக அமைந்து விடக்கூடாது. இந்தப் பெருந் தொற்று காலத்தில் இன்னொரு நெடிய போராட்டத்திற்கான விதையை தூவிடும்  இந்த முடிவை மாநில அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!