இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்.. அமித்ஷாவுக்கு எதிராக வெடிக்கும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Sep 14, 2021, 5:51 PM IST
Highlights

இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும்  என்று கூறுவதில் ஏராளமான  பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!

இந்தியர்கள் அனைவரும் தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்தி மொழி தின நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசும்போது;- இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்துப் பயன்படுத்துவதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை பாமக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயலாகும்!

இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும்  என்று கூறுவதில் ஏராளமான  பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!

தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை  மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

click me!