நம் நாட்டு பெண்களின் சாதனைகளில் இந்தியா கர்வம் கொள்கிறது.. மகளீர் தினத்தில் மனமுவர்ந்து வாழ்த்திய மோடி..

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 4:30 PM IST
Highlights

சர்வதேச மகளிர் தினத்தன்று எங்கள் அழியாத சக்திகளுக்கு வணக்கம்.. நம் தேசத்து பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. 

நம் தேசத்தின் பெண்களின் சாதனைகள் இந்தியாவை பெருமை கொள்ள செய்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகளிர் தினமான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் பாடலுக்கு ஏற்ப, உலகம் முழுதும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பல்வேறு துறைகளிலும் போட்டி போட்டு சாதனை படைத்து வருகின்றனர். சமையல் தொடங்கி விவசாயம் ஆரம்பித்து விண்வெளித் துறை வரை பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. இப்படி எல்லா துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 

இந்த வகையில் பெண்களை போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சர்வதேச மகளிர் தினத்தன்று எங்கள் அழியாத சக்திகளுக்கு வணக்கம்.. நம் தேசத்து பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றது நமது அரசாங்கத்துக்கு கிடைத்த கவுரவம். என அவர் கூறியுள்ளார். 

அதேபோல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டுப் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய வரலாறுகளையும், சாதனைகளையும் புரிந்துள்ளனர். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும்  ஆண்களுக்கு இடையில் சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் கூட்டாக தீர்மானிப்போம் என்று  அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!