அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது? சும்மா புட்டு புட்டு வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2021, 1:13 PM IST
Highlights

ஜீரோ வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது. உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்;- ஜீரோ வரியில் ஏழைகள் பயனடைவதில்லை; மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன. வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 சதவீதம் ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. 

10 ஆண்டுகளில் வரி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 5 ஆண்டுகளில் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வாங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் வாங்கப்பட்ட மறைமுகக் கடன் ரூ.39,074 கோடி குறித்து சரியான விளக்கங்கள் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி,  வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரி பங்கீடு, திட்ட மானியம் ஆகிவையே வருவாயாகும். இதில், மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. மதுபான வருவாயை கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வரி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வாகனளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணமும் உயர்த்தப்படாம்ல் உள்ளது.

ஜீரோ வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது. உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பல வருடங்களாக சொத்து வரியை அதிகரிக்கவில்லை.  அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது?  வர வேண்டிய 3 சதவீத வரி வரவில்லை என்றால் அது சமூக நீதிக்கு விரோதமான விளைவு. அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது. மாநில அரசிடம் வருமான வரி குறித்த தரவுகள் இல்லை.  சமூக நல திட்டங்களுக்கான மானியங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர்ந்ததற்கான தரவுகள் இல்லை. சரியான வரியை சரியான நபர்களிடம் ஈட்டுவது அரசாங்கத்தின் திறமை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

click me!