வெள்ளை அறிக்கை: மறைமுக கடன் 39 ஆயிரத்து 79 கோடி எதற்காக வாங்குனீங்க.. அதிமுகவை அலறவிடும் பிடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2021, 12:57 PM IST
Highlights

அதிமுக ஆட்சி காலத்தில் வரி செலுத்த வேண்டியவர்களிடமிருந்து வரியை பெறாமல் இருந்துள்ளனர். இது முற்றிலும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், குறிப்பாக வரி வசூலிக்கும் முறையை பணக்காரர்களுக்கு பயன் தரும் வகையிலும், ஏழைகளுக்கு எதிராகவும் உள்ளது என்றார். 

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டின் கடன் சுமை கணக்கு வழக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் குற்றஞ் சாட்டியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளதாக தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், அது தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று அவர் வெளியிட்டார். சுமார் 120 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கடந்த பத்து ஆண்டு கால தமிழக நிதி நிலைமை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இயல்பாகவே திமுகவின் தத்துவம் மற்றும் அதன் குணாதிசயத்தை தெரிவிக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார். அரசு நிர்வாகத்தில் எப்போதும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது என்ற அவர், இதன் மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2006-2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது, ஆனால் அதன் பின்னர் நிதி நிலைமை சீரழிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன் 4.75 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றார். கடன் வாங்கித்தான் ஆட்சியையே நடத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் அதிமுக ஆட்சி இருந்ததாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் கடைசி ஐந்து ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி என்றும், தலா ஒரு குடும்பத்தின் கடன் மட்டும் தற்போது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் என்றும் அவர் கூறினார்.  2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ் நாட்டின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி, ஆனால் 2016 இல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் 2.28 லட்சம் கோடி என கூறியுள்ளார். அதே நேரத்தில் மறைமுக கடனாக 39 ஆயிரத்து 79 கோடி எதற்காக வாங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் கடன் சுமை தொடர்பான கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக அரசின் கடன் உத்திரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார். அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது, அதேநேரத்தில் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நீதி 30 சதவீதம் குறைந்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் வரி செலுத்த வேண்டியவர்களிடமிருந்து வரியை பெறாமல் இருந்துள்ளனர். இது முற்றிலும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், குறிப்பாக வரி வசூலிக்கும் முறையை பணக்காரர்களுக்கு பயன் தரும் வகையிலும், ஏழைகளுக்கு எதிராகவும் உள்ளது என்றார். தமிழக அரசு இதுவரை பெற்றுள்ள கடனுக்கு செலுத்தும் ஒரு நாள் வட்டி மட்டும்,  87.31 கோடி என அவர் அதிர்ச்சி தெரிவித்தார். அதேநேரத்தில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை 20,033 கோடி என அவர் அதிர்ச்சி தெரிவித்தார். மின்சாரவாரியம், போக்குவரத்து கழகத்தில் மட்டும் 2 லட்சம் கோடி கடன் உள்ளது. வரி வசூல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும், அதேநேரத்தில் சமூகநீதிக்கும் அது வழிவகை செய்ய வேண்டும் என்றார். உடனடியாக போக்குவரத்து துறையை சீரமைக்க வேண்டிய நெருக்கடி உள்ளது எனவும் அவர் கூறினார்.

 

click me!