அதிமுக ஆட்சிக்கு ஸ்டாலின் எப்படி குடைச்சல் கொடுத்தார்.? ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸால் ஏன் முடியல.? குடையும் மாஜி எம்.பி.!

By Asianet TamilFirst Published Jan 17, 2022, 7:41 PM IST
Highlights

பாஜகவை விட்டு அதிமுக வெளியில் வந்தால் மட்டுமே கட்சிக்கு எதிர் காலம் உண்டு. இல்லையென்றால் இப்போது இருக்கும் தலைமையை தூக்கி எறிந்து விட்டு, எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக தலைவர்கள் ஒருங்கிணைந்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்போம்.

அதிமுக ஆண்ட போது திமுக கொடுத்த குடைச்சல், இப்போது அதிமுகவால்  கொடுக்க முடியலையே, ஏன் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.. கே.சி. பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பிலும் அவருடைய ரசிகர்கள் சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தற்போதைய அதிமுக தலைமைக்கு பணமே பிரதானம். திமுக எதிர்ப்பில் உருவான இயக்கம் அதிமுக என்பதையே மறந்து, அதிமுக தலைவர்கள் திமுக ஆட்சியைப் புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து முதன் முதலில் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் ஊழல் நடந்துள்ளது.

 

இதை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதிமுக தலைமை அமைதி காக்கிறது. வேடிக்கை பார்க்கிறது. ஜெயலலிதா போல் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வலுவான தலைவர்கள் இல்லை. பாஜகவை விட்டு அதிமுக வெளியில் வந்தால் மட்டுமே கட்சிக்கு எதிர் காலம் உண்டு. இல்லையென்றால் இப்போது இருக்கும் தலைமையை தூக்கி எறிந்து விட்டு, எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக தலைவர்கள் ஒருங்கிணைந்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுத்து, திமுக ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி, போராட்ட களம் காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

எம்.ஜி.ஆரின் 105-வது  பிறந்த நாளில், அதிமுக என்ற மக்கள் இயக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சி, வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம் என்பதை சபதமாக ஏற்று செயல்படுவோம். உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவோம். புதிய மாற்றத்தை உருவாக்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பாதையில் சென்று, புதிய சகாப்தம் படைப்போம்.” என்று தெரிவித்துள்ள கே. சி.பழனிச்சாமி, “அதிமுக ஆண்ட போது திமுக கொடுத்த குடைச்சல், இப்போது அதிமுகவால்  கொடுக்க முடியலையே.. ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!