நம்பிவந்த தம்பியை நடுத்தெருவில் விட்ட பஞ்சாப் முதல்வர் சன்னி.. காங்கிரசில் உச்சகட்ட களேபரம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 17, 2022, 7:04 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் செய்தார், கருத்துக்கணிப்புகள் தனக்கு சாதகமாக உள்ளது என்றும், தான் எம்எல்ஏ பதவிக்கு விருப்ப மனு கொடுத்து இருந்தும் தனக்கு சீட் வழங்கப்படவில்லை, இதுகுறித்து முதல்வர் சன்னியுடன் பேசியுள்ளேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக போட்டியிட பஞ்சாப் மாநில முதல்வரின் சகோதரர் அரசு வேலையை துறந்துவிட்டு வந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுயேட்சையாக போட்டியிடும் முடிவில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு பெயர் போன மாநிலம் ஒன்று உண்டு என்றால் அது பஞ்சாப் மாநிலம் என்றே சொல்லலாம். மாநில தலைவர் பதவி முதல், மாநில முதலமைச்சர் பதவி வரை அனைத்திற்கும் நடந்த அதிகாரப்போட்டி அக்காட்சியின் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கிருந்து திரும்பினார். தேசிய அளவில் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அம்மாநில முதல்வர்  சரண்ஜித் சிங் சன்னி தான் அதற்கு காரணம் என்றும், உடனே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கிடையில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அம்மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஜனவரி 14 அன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தற்போது திடீரென தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில் தேர்தல் பணிகள் அம்மாநிலத்தில் வேகமாக நடந்து வருகிறது. முன்னதாக முதல்வர் சரப்ஜித் சிங் சன்னியின் சகோதரர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட தனது அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்தார். ஆனால் அவருக்கு தேர்தலில் சீட்டு கொடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங், பஞ்சாப் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். மனோகர் அனஸ்தீசியாவில் முதுகலை பட்டதாரி ஆவார். இதழியல் படிப்பில் எம்.ஏ பட்டதாரி மற்றும் சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியும் ஆவார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட எத்தனித்த அவர், கடந்த ஆண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

நந்தபூர் கலூரில்  உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் போது அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார், அவருக்கு அங்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் அவர் போட்டியிட விரும்பினார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பஸ்ஸி பத்தனாவுக்கு சென்று  மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார், அந்த இடத்தில் அலுவலகத்தை திறந்து வைத்து அன்றாடம் மக்களை சந்திக்க தொடங்கினார். இது எஸ்சி-எஸ்டி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும.  அதேநேரத்தில் இவருக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் எம்எல்ஏ குர்பிரீத் ஜிபிக்கு  ஆதரவாக பேரணி நடத்தினார். அங்கு ஜிபி தான் வேட்பாளராக இருப்பார் என்றும் கூறினார். இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 86 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியல் சனிக்கிழமை வெளியானது. ஆனால் அதில் மனோகரின் பெயர் இடம்பெறவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் செய்தார், கருத்துக்கணிப்புகள் தனக்கு சாதகமாக உள்ளது என்றும், தான் எம்எல்ஏ பதவிக்கு விருப்ப மனு கொடுத்து இருந்தும் தனக்கு சீட் வழங்கப்படவில்லை, இதுகுறித்து முதல்வர் சன்னியுடன் பேசியுள்ளேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அவர் பஸ்ஸி பதானாவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக சிட்டிங் எம்எல்ஏ குர்பிரீத் சிங் ஜிபிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது அண்ணன் முதல்வராக இருக்கிறார் அதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி கட்சிக்கு வந்த அவர் தற்போது வாய்ப்பு  கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும், சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!