வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங்.. ஜனநாயகத்தை தகர்க்கும் செயல்... தேர்தல் கமிஷனுக்கு ஸ்டாலின் பரபர கடிதம்.!

By Asianet TamilFirst Published Apr 16, 2021, 9:11 PM IST
Highlights

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின்  கடிதத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை ‘சுவிட்ச் ஆஃப்’ (பேட்டரிகளை எடுக்காமல் - செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.


அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 7 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள். இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்காக- பாதுகாப்பு அறைக்கு அருகில்- உள்வட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்பு. அதற்கு அடுத்து இரண்டாவது அடுக்காக- மாநில ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் படையைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது அடுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கும் வரை அந்த பாதுகாப்பு அறைக்குள் யாரும் உள்ளே நுழைவதையும், அங்கிருந்து எதுவும் வெளியே போவதையும் தடுப்பதே இந்த மூன்று அடுக்குப் பாதுகாப்பின் மிக முக்கிய நோக்கம்.


 நுழைவுவாயிலில் சிசிடிவி கேமிராக்கள் தேர்தல் ஆணையத்தால் பொறுத்தப்பட்டு- பாதுகாப்பு அறைக்குச் செல்லும் வழி மற்றும் அந்த அறையின் நுழைவாயில் கதவு ஆகியவற்றின் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரின் நடமாட்டத்தையும் கண்காணிக்கும் வகையில் இந்த கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தெரியுமாறு பெரிய அளவிலான திரை வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி அடிப்படையில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு- அவர்கள் திரையில் வரும் காட்சிகளை கண்காணித்து வருகிறார்கள். பாதுகாப்பு அறையின் ‘பாதுகாப்பிற்கு’ செல்லும் ஒவ்வொரு பாதுகாப்பு அலுவலருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் - அதிகாரபூர்வமற்ற நபர் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாது.
 பாதுகாப்பு அறையின் பொறுப்பு அதிகாரியின் அனுமதியுடன் வேட்பாளரும், அவர்களால் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகளும் அந்த “பாதுகாப்பு அறை” பகுதிகளை- அங்குள்ள லாக் புக்கில் கையெழுத்திட்ட பிறகு கண்காணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் 5.4.2014 தேதியிட்ட கடித எண் 464/L&O/EPS-2014-ல் உள்ள பிரிவு VI(c) -ன்படி “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது. அந்த அறிவுரை யாதெனில், “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படக்கூடாது. வாகனங்களில் வருவோர் இறங்குவதற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியின் “பாதுகாப்பு வளையத்திற்கு” வெளியிலேயே ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்குப் பிறகுள்ளது நடைபாதை பகுதி மட்டுமே” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு அறையின் “உள்வட்ட பாதுகாப்பு வளையம்” வரை ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பார்வையிட்டு, லாக் புக் மற்றும் வீடியோகிராபிகளை ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு- அந்த இடத்தில் உள்ள கள நிலவரம் குறித்து ஒவ்வொரு நாளும் அறிக்கை அனுப்ப வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் “பாதுகாப்பு அறைகள்” இருந்தால்- இதே பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியே செய்ய வேண்டும்.
மாவட்ட தலைநகருக்கு வெளியே உள்ள பாதுகாப்பு அறைகளை மாவட்டத் தேர்தல் அதிகாரி அடிக்கடி பார்வையிட வேண்டும். குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு நாளுக்கு ஒரு முறையாவது பார்வையிட வேண்டும். காவல்துறை துணை ஆணையர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் தங்கள் மாவட்டத்திற்குள் உள்ள பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பிற்கு தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பாகும். பாதுகாப்பு அறையின் காவல் குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுவதுமாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் ஜிசிடி கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை வளாகத்திற்குள்- 13.4.2021 அன்று இரவு மூடப்பட்ட வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதையறிந்த எங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்களுடன் அங்கு சென்று இது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார்கள். “அது பெண் காவலர்களுக்கான மொபைல் டைலட் வாகனம்” என்று கூறினார்கள். எங்கள் வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பல “வை-ஃபை” தொடர்புகள் அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்துள்ளன என்பதையும் எங்கள் வேட்பாளர்கள் கவனித்துள்ளார்கள்.
ராமநாதபுரத்தில் உள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் மடிக்கணினியுடன் 31 பேர் அத்துமீறி நுழைந்துள்ளார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நெய்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் “கணிணி நிபுணர்கள்” மூன்று பேருக்கு “தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக” நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு அந்த கட்டடத்திற்குள் சென்றிருக்கிறார்கள். திருவள்ளூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு பலர் “கணிணி கற்பிப்பவர்கள்” என்ற பெயரில் “வெளியில் சொல்லப்படாத” காரணங்களுக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே மாநிலம் முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள “பாதுகாப்பு அறை” கட்டடங்களின் பாதுகாப்பும் - அந்த வளாரத்தில் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அனைத்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளும், நடைமுறைகளும் மொத்தமாக தோல்வியடைந்து விட்டன என்பதைக் காட்டுகிறது. மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் வாக்கு பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டுமின்றி - கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி யூனிட் போன்றவற்றையும் தொழில் நுட்ப ரீதியாக- மின்னணுவியல் ரீதியாக பாதுகாப்பது மிகுந்த முக்கியமாகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பிற்கு எந்த வடிவிலும் சந்தேகம் எழ அனுமதிக்கக் கூடாது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்யவோ, வை-பை அல்லது வேறு எந்த ஒரு வழியையும் பயன்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பதிவுகளை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ ஒரு சிறு துளி வாய்ப்பு கூட இருப்பதற்கு கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில், அவற்றிற்கு வழி அமைத்துக் கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த முயற்சிகள்- தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வரும் கருத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது.
அப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால்- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும். ஜனநாயகத்தில் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை மிக அழகாக வர்ணித்துள்ள சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மேற்கோளே நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நேர்மையான தேர்தல் என்பது வாக்குப் பதிவுடன் முடிந்து விடுவதில்லை. வாக்கு எண்ணிக்கை முறையாக நிறைவு பெறும் வரையிலும் அது தொடருகிறது. அதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவான ஒவ்வொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய முழுக்கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. அதில் ஏதாவது தோல்வி ஏற்பட்டால் ஜனநாயகம் பாதை தவறி விடும். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ், விவிபிஏடி) கைமுறையாகவும், மின்னணுவியல் வாயிலாகவும் எவ்வித சேதாரங்களுக்கும், ஹேக்கிங்குகளுக்கும், சிதைத்தலுக்கும் உள்ளாகி விடாமல் முழுமையாக பாதுகாத்திட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் அந்த இருக்கும் வளாகங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு அறைகளுக்கு அருகில் எந்த வகையான வாகனங்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் உள்ள வை-ஃபை தொடர்புகளை உடனடியாக செயலிழக்க வைக்க வேண்டும். வெளியாட்கள் வருவதையும்- அது போன்ற நபர்கள் நடமாடுவதையும் தடுக்க, பாதுகாப்பு அறைகள் இருக்கும் கட்டடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும்”. என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!