
ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டன்ம் தெரிவித்துள்ளதோடு, ஜிஎஸ்டி வரி உயர்வு திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கும் பல்வேறு சேவைகளுக்கும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பொருட்களின் தன்மையை பொறுத்து 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாக்லேட், மின்சார உபகரணங்கள், உடைகள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவது குறித்து மாநில அரசுகளோடு பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டாண்டுகளாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெல்லம், அப்பளம், சாக்லெட் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உட்பட 143 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு பத்து சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்று பரவல் நெருக்கடியால் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நிலையில், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வு திட்டம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.
மேலும் மாநில அரசின் நிதியாதாரத்தை பாஜக மத்திய அரசு சட்டபூர்வமாக அபகரித்துக் கொள்வதால், தமிழ்நாட்டிற்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து, வஞ்சித்து வருகிறது. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை மீது மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. தாங்க முடியாத சுமையாக விலைவாசி உயர்வு தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு, பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மக்கள் தலையில் வரிச்சுமை ஏற்றுவதை கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய அரசின் வரி உயர்வு எவ்வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி வரி உயர்வு திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.