சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது. வெட்ட வெளிச்சமாக அதிமுகவுக்கு யார் பொறுப்பானவர்கள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளை எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் வழங்கி இருக்கிறது.
சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா அதிமுக மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது. இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.வளர்மதி;- ஆளும் கட்சியை போல மிக வேகமாக சுறுசுறுப்பாக ஜனநாயக முறைப்படி அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. 11 மாத திமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்தி வேறு பெயரை சூட்டி இவர்கள் தங்களுடைய செல்வாக்கை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். திமுகவினர் புதிதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது. வெட்ட வெளிச்சமாக அதிமுகவுக்கு யார் பொறுப்பானவர்கள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளை எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் வழங்கி இருக்கிறது.
எனவே சசிகலா குறித்து பேசுவதற்கு வழியில்லை. சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். பொதுமக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக நிச்சயம் அதிமுக போராட்டம் நடத்தும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தான் எங்கள் தலைமை. அவர்களுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்துகொள்வோம் என வளர்மதி கூறியுள்ளார்.