
உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடப்பாடி பழனிச்சாமிக்கு தருவதற்கு பதிலாக அவர் அதில் இலங்கைக்குச் செல்லட்டும் என்றும், அங்கு உயிரிழந்த ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆவி அவர்களை சும்மா விடாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மின்சாரம் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்ட மத்திய அரசு மீது திமுக பழி போடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசையும் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:- திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, கவர்னர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாதபோது வால் எப்படி சரியாகும், தலை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின், வால் என்றார் காவல்துறை என்றார். தொடர்ந்து பேசியவர், திமுக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்றார்.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்துள்ளார் என்ற அவர் அந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த மரணம் தொடர்பாக உரிய குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றார். அப்படி செய்தால் மட்டுமே லாக்கப் மரணங்களை தடுக்க முடியும் என்றார். இதுபோன்ற வழக்குகளை போலீசார் விசாரித்தால் அவர்கள் போலீசுக்கு ஆதரவாகவே செயல்படுவார் என்று விமர்சித்தார். திமுக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் அதன் கூட்டணி கட்சிகள் அது குறித்து வாய் திறப்பதில்லை என்ற ஜெயக்குமார், தோழமை கட்சிகளின் இந்த நடவடிக்கையை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது காரை எடுத்துச் செல்லலாம், ஆனால் அவர் கமலாலயத்திற்கு மட்டும் சென்றுவிட வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடப்பாடி பழனிச்சாமிக்கு தருவதற்கு பதிலாக அவர் காரை எடுத்துக்கொண்டு இலங்கைக்குச் செல்லட்டும், அங்கு ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி சும்மா விடாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் செயற்கையாக மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு மத்திய அரசின் மீது திமுக பழிபோடுகிறது என்றார். பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டப்படுத்தும் இந்த பாவம் திமுகவை சும்மா விடாது என்றார்.