அரசு அதிகாரிகள் திருந்தவே மாட்டாங்களா.? லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், 26,99,335.00 ரொக்கம் பறிமுதல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 11:30 AM IST
Highlights

அதிகபட்சமாக திருவண்ணாமலை ஏடி டவுன் பிளானிங் அலுவலகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், வேலூர் கூடுதல் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது. 

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 26,99,335.00  ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, லஞ்சம் லாவண்யத்தை தடுப்பது என அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டது. இது பண்டிகை காலங்கள் என்பதால் அரசு அலுவலங்களில் பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் இலஞ்சமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதாவது, ஒவ்வொரு பண்டிகை நாட்களுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக அரசு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறது, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், டாஸ்மார்க், ஆர்டிஓ செக்போஸ்ட், என 38 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், திருவான்மியூர், அம்பத்தூர், பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் மயிலாப்பூர் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் கணக்கில் காட்டப்படாத பணம் 31,275  ரூபாய் கைப்பற்றப்பட்டது, 

அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எதுவும் கைப்பற்றப்படவில்லை, வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 11 ஆயிரத்து 890 ரூபாய் கைப்பற்றப்பட்டது, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது, விழுப்புரம் டாஸ்மாக்கில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது, ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம்( கிழக்கு) 1 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதிகபட்சமாக திருவண்ணாமலை ஏடி டவுன் பிளானிங் அலுவலகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், வேலூர் கூடுதல் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 26,99,335.00 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிட்டுள்ளானர். 
 

click me!