மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் 27 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 நபர்களும் பாதிக்கப் பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு சவாலாக டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே தலை தூக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள் தோறும் ஆய்வு செய்ய மாநகராட்சி பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடன் ஆலோசனை கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கடந்த 15 நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அடையாறு மண்டலத்தில் 27 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 நபர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 நகங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த மண்டலங்களில் அனைத்து கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்களால் வீடுகள்தோறும் சென்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 12,546 வீடுகளில் கொசுப்புழு பல இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் அழைத்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.