பாஜக ஒருபோதும் இதை செய்யாது.. பொன் ராதாகிருஷ்னன் பேச்சு.. எதை சொல்கிறார்..?

By Raghupati RFirst Published Jan 18, 2022, 6:06 AM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான இடங்களை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 230 பேர் விருப்ப மனுவை கொடுத்துள்ளனர்.விருப்ப மனு அளித்த பாஜகவினரிடம் நேர்காணல் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தி வருகிறார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான இடங்களை கூட்டணி கட்சியான அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுப் பெறுவோம். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், பாஜகவினர் மாற்றுக்கட்சியை நோக்கி இடமாறுவது வழக்கம். இது போன்று ஏற்கனவே நடந்துள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது, ஆட்சியும் பிடித்திருக்கிறது.

டெல்லியில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருவதால் குடியரசு தின அணிவகுப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் கேரளா,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலத்தை ஓரங்கட்டும் நிலையை ஒரு காலமும் பாஜக செய்யாது. எந்த ஒரு கட்சியும் வைத்துக்கொண்டு ஆட்சியையும் வைத்து கொண்டு எந்த மாநிலத்தையும் புறந்தள்ளி வைக்க பா.ஜ.க அரசாங்கம் முடிவெடுக்காது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய காலகட்டத்தில் நிலைமையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய மிகத் தெளிவான முடிவுகளை எடுத்து வருகிறார். அதற்கான பலன் கிடைத்து வருகிறது. கேலியும், கிண்டலும் செய்வது முறையற்ற விஷயம். ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்ன குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பது என்னுடைய கருத்து. சின்ன குழந்தைகளை ஏன் அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

click me!