
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் அலங்கார ஊர்தி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாக நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு திமுக எம்.பி கனிமொழி, மதுரை எம்.பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதேபோல் நீர் விலக்கு கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த, தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவும் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செக்கிழுத்த சிதம்பரனாருக்கும், கவிதைகளால் விடுதலை உணர்வைக் தூண்டிய மகா கவிக்கும் இந்த தேசம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா என கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
ஆங்கிலேயருக்கு எதிராக வீரப்போர் புரிந்த முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியாருக்கும், தன் சொத்துக்களை விற்று சுதேசிகப்பல் ஓட்டி சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாருக்கும், அனல்பறக்கும் கவிதைகளால் விடுதலை உணர்வைக் கிளர்ந்தெழ செய்த மகாகவி பாரதியாருக்கும் இந்த தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா ? குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்தியும் இடம்பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்குவதுதான், இந்திய விடுதலைக்காக முதல் முழக்கமிட்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.