
சசிகலா விடுதலையாகி வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதல்வர் பழனிசாமி கூறிய நிலையில் சசிகலாவை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் 2 சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அபராத தொகையை டிடி மூலம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் விடுதலைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சசிகலா விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேசிவிட வேண்டும் என்பதில் அவரது வழக்கறிஞர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் விருப்பமாக உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக சிறை நிர்வாகமும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்க யோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் சசிகலாவை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது. விண்ணப்பம் கொடுத்துள்ளவர்களின் தமிழக முன்னாள் அமைச்சர்கள் இருவரின் பெயரும் இருப்பதாக தெரியவருகிறது. இதனால், சிறையில் வெளியே வருவதற்கு முன்னதாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் 2 பேர் சந்திக்க நேரம் கேட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.