Thangamani Vs Senthil balaji : ரெய்டுக்கு காரணம்..கிரிப்டோகரன்சியின் முதல் ஊழல்வாதி..தங்கமணி Vs செந்தில்பாலாஜி

By Raghupati RFirst Published Dec 18, 2021, 12:11 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் வரிசையில் ஐந்தாவது நபராக, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை மூலம் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, ‘இன்றைய தினம் என்னுடைய வீட்டிலும் என்னைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது யாரென்றே தெரியாதவர்கள், கழகத்தினர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் என அனைவரது வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் என் வீட்டில் இருந்து 2.16 கோடி ரூபாய் கிடைத்ததாகப் பல செய்திகளில் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய வீட்டில் இருந்து ஒரு பொருள் கூட எடுக்கவில்லை. என் செல்ஃபோனை மட்டும்தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 

வேற எதுவுமே என் வீட்டிலிருந்து எடுக்கவில்லை. கிரிப்டோகரன்சியில் நான் முதலீடு செய்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் யூகத்தின் அடிப்படையில் என்று சொல்லியிருக்கிறார்கள். கிரிப்டோகரன்சியினுடைய விளக்கமே எனக்குத் தெரியாது. அதில் எப்படி முதலீடு செய்வது என்றே எனக்குத் தெரியாது. இதுபோல் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இதற்கெல்லாம் இந்த இயக்கம் எந்தச் சூழ்நிலையிலும் எந்த தொண்டனும் அஞ்ச மாட்டான் என்பதற்குச் சான்றாக இன்றைய தினம் காலையிலிருந்து அதிமுகவினர் வெயில் என்றும் பாராமல் வந்துள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த சோதனைக்கு முழு காரணம் செந்தில் பாலாஜிதான். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை என்னை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் செய்கின்றார். ஆயிரம் செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சட்டத்தின் மீது, ஆண்டவனின் மீது, நீதி மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன்’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடும் குற்றசாட்டை வைத்தார் தங்கமணி.

இதுகுறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கான காரணம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒன்றைக் கூறுகிறார். அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், வேறு ஒரு விஷயத்தை கூறுகின்றனர்.இதில் எது உண்மை என்பது குறித்து, முதலில் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். பின், என் மீது குற்றம் சொல்லட்டும். இந்தியாவிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி தங்கமணி தான்.

வடசென்னை மற்றும் துாத்துக்குடி அனல்மின் நிலையங்களில் காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத 'கிரிப்டோ கரன்சி' இரண்டுக்கும் அவர் முதலில் விளக்கம் சொல்லட்டும்’ என்று கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கத்தை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வைத்திருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை தற்போது, அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இதில் இருந்தே இருவருக்கும் உரசல்கள் அதிகமாகின என்று கூறுகிறார்கள். விரைவில் வரப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கையாகவும், எதிர்க்கட்சியான அதிமுகவை மன ரீதியில் துன்புறுத்தவும் செய்யவே தொடர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை திமுகவினர் செய்து வருகின்றனர் ‘ என்று கூறுகின்றனர் அதிமுகவினர்.

click me!