
பிரபல திரைப்படநடிகரான பிரகாஷ்ராஜ், சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகள் குறித்து, ஒரு குடிமகனாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக பா.ஜ.க-வை நேரடியாக தைரியமாக விமர்சிப்பவர்களில் இவரும் ஒருவர்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர், சமீபத்தில் கர்நாடக தேர்தல் நடைபெற்ற போது பா.ஜ.க-வால் 56 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது. என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் கர்நாடகாவில் ஆட்சியை நிலை நிறுத்த பா.ஜ.கவினால் முடியவில்லை. தற்போது காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணியில் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
இதனை குறித்து பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில் இனி கர்நாடகா காவி நிறத்தில் இருக்கப்போவதில்லை. வண்ணமயமாக இருக்கப்போகிறது. என கூறியிருக்கிறார்.
மேலும் ”ஆட்டம் தொடங்கும் முன்னரே முடிந்துவிட்டது” என கூறியிருக்கும் பிரகாஷ்ராஜ், 56 இடங்கள் குறித்து நான் சொன்னதை மறந்துவிடுவோம். ஆனால் 55 மணி நேரம் கூட பா.ஜ.கவினால் கர்நாடகாவில் தாக்குபிடிக்க முடியவில்லை. என கூறி கேலி செய்திருக்கிறார். இனியும் மக்கள் தரப்பில் எப்போதும் நிற்பேன். கேள்விகள் எழுப்புவேன். என கூறி தன் பதிவை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.