
பிரமாணப் பத்திரங்களில் பெரும்பாலானவை போலி….தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் பகீர் புகார்…
இரட்டை இலைச் சின்னம் உரிமை கோரும் விவகாரத்தில் சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக என்ற கட்சிப் பெயரையும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இதையடுத்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் இரட்டைஇலைச் சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை ஜூன் 16-க்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இரு அணியினரும் அவர்களது தரப்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இது தவிர, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பிலும் அதிமுகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அண்மையில் சசிகலா அணியினர் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தனர்.
இச்சூழலில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணியினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களில் பெருவாரியானவை போலியானவை என்றும் அந்த பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.