
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எனக்காக தொப்பி காட்டி வாக்கு சேகரித்தவர் என்றும், தாங்கள் சிக்கக் கூடாது என்பதற்காக அதிமுகவை காட்டிக் கொடுக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மறைந்த ஜெயலலிதா குறித்து திவாகரன் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், ஜெயலலிதாவை திவாகரன் தாக்கிப் பேசவில்லை. சசிகலாவை முழுமையாக காக்க ஜெயலலிதா தவறிவிட்டார் என்ற ஆதங்கத்தில் திவாகரன் கூறியிருப்பார் என்றார். திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை அரசியலாக்க வேண்டாம். சகோதரி சசிகலா கஷ்டப்படுகிறாரே என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசிவிட்டார்.
நேற்று முன்தினம் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்து குறித்து பதிலளித்த அவர், அதிமுகவை அழிக்க நடக்கும் உச்சகட்ட நடவடிக்கைத்ன் இந்த வருமான வரித்துறையின் சோதனை. ஆட்சியில் இருப்பவர்கள் அதிமுகவை உடைக்கிறார்கள். பதவியில் இல்லை என்றால் சசிகலா தலைமையின்கீழ்தான் இருந்திருப்பார்கள்.
என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு மெய்க்காவலன்போல் நான் இருந்துள்ளேன். அதிமுகவில் எனக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தவர். ஜெயலலிதா இருந்தபோது சிலரின் சதி காரணமாக நாங்கள் விலக்கப்பட்டோம்.
ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு பதவியில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பென் டிரைவ் என்றாலே ரகசியம் இருக்கும்என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை, ஆர்.கே. நகர் தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட்டது ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவால்தான். ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் தொப்பியைக் காட்டி எனக்கு வாக்கு கேட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார். பயத்தின் காரணமாக ஆட்சியாளர்கள் பிதற்றி வருகிறார்கள். முதலமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி. தாங்கள் சிக்கக்கூடாது என்பதற்காக அதிமுகவை காட்டிக் கொடுக்கிறார்கள்.
வருமான வரி சோதனையில் சிக்கிய ஈரோடு ராமலிங்கம் யார்? என்றும் ஈரோடு ராமலிங்கத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி வீட்டில் சோதனை நடக்காதது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.