திமுக அரசின் மீது உருவாகியிருக்கும் பாசிட்டிவ் இமேஜை டேமேஜ் ஆக்கலாம் என்பதே எடப்பாடியின் தற்போதைய திட்டம்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தது. மு.க.ஸ்டாலின் இது குறித்துப் பேசும்போதெல்லாம் தார்மீக முறையில் அதிமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
அந்த ரூட்டிலேயே புயலைக் கிளப்ப இருக்கிறாராம் எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி. தற்போது திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 அமைச்சர்களின் மீது ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளன. அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. திமுக சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், ஆகிய 13 அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவை தவிர அமலாக்கத்துறை மூலமாகவும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில திமுக அமைச்சர்களுக்கு சிக்கல் உருவாகிறது. இதன்மூலம் தங்கள் மீதான திமுக அரசின் தாக்குதலை நிறுத்தி வைக்கலாம், திமுக அரசின் மீது உருவாகியிருக்கும் பாசிட்டிவ் இமேஜை டேமேஜ் ஆக்கலாம் என்பதே எடப்பாடியின் தற்போதைய திட்டம்.
அதேசமயம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை தனக்கு பின்னால் எப்போதும் தக்க வைப்பதற்காகவே சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் என கொளுத்திப் போட்டுள்ளார் என்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் தேர்தல் எனவே சோர்வடையாமல் தேர்தல் பணிகளை பாருங்கள் என தனது ஆதரவாளர்களை தன்னுடன் தொடர்ந்து இருக்கவைக்கவே இப்படி அவர் பேசிவருவதாகவும் சொல்கிறார்கள். எடப்பாடியாரின் இந்த ஃபார்முலா எடுபடுமா என்பது போகப்போக தெரியும்.!