செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி... வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கதறி அழுத துரை வைகோ

By Ajmal KhanFirst Published Mar 24, 2024, 2:38 PM IST
Highlights

திராவிட சக்திகளை அழித்துவிட்டு மதவாத சக்திகளை வேரூன்ற வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் நாம் எல்லோரும் சேர்ந்துள்ளோம். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது என துரை வைகோ உறுதியாக தெரிவித்தார். 

திமுக கூட்டணியில் மதிமுக

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் மதிமுக இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து இந்தியா கூட்டணியின் திருச்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோவை அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்த பேசினர். இதனை தொடர்ந்து பேசிய பேசிய துரை வைகோ, நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உங்களுக்கு எத்தனை சீட்டு கொடுக்க இருக்கிறார்கள்? கண்டிப்பாக சீட்டு கொடுப்பார்களா ? என என்னிடத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள்.  நான் சொன்னேன் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும் இந்த அணியில் தான் நாங்கள் இருப்போம் என்றேன்.

ஆசைப்பட்டு கடசிக்கு வரவில்லை

நான் அரசியல் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் ஆனால் நான் அரசியல்வாதி அல்ல கனவில் கூட நான் அரசியலுக்கு வருவேன் என்றும் எண்ணி பார்க்கவில்லை என கூறினார். அப்போது நான் ஆசைப்பட்டு இந்த கட்சிக்கு வரவில்லை வலுக்கட்டாயமாக எங்களது கட்சிக்காரர்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இப்பொழுதும் நான் பெரிய வேட்கையோடு, ஆசையோடு அரசியலில் இருக்கிறேனா என்றால் கிடையவே கிடையாது. உண்மையாகவே சொல்கிறேன். மனசை தொட்டு சொல்கிறேன். இப்பொழுதும் தேர்தலில் நிற்கிறேன் என்று நான் சொல்லவில்லை. வேறு யாரேனும் நிறுத்துங்கள், நான் பணியாற்றுகிறேன் என கூறினேன். என் அப்பாவிற்கு முதுமை வந்து விட்டது. எங்க அப்பா ஒரு சகாப்தம் என கூறினார். 

 கண்ணீர் விட்டு அழுத துரை வைகோ

எங்க அப்பாவிற்கு தலை குனிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எங்கள் அப்பாவிற்காக எங்களது கட்சிக்காக ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் நிர்வாகிகள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துள்ளனர் என தெரிவித்தார். அப்போது உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டு துரை வைகோ அழுதார்.  இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் சின்னம் என்ன என கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளித்த துரை வைகோ, சின்னம், கண்டிப்பாக, செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிட போவது உறுதி,  கலைஞரை உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம் - அண்ணா வளர்த்த கட்சி ... கலைஞர் வளர்த்த கட்சி திமுக - என் அப்பா இதே திமுகவில் சூரியன் சின்னத்தில் தான் போட்டி இட்டார். 

தயவு செய்து புண்படுத்தாதீர்கள்

திராவிட சக்திகளை அழித்துவிட்டு மதவாத சக்திகளை வேரூன்ற வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் நாம் எல்லோரும் சேர்ந்துள்ளோம். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என துரை வைகோ கூட்டத்தில் வேதனையோடு பேசினார். 

இதையும் படியுங்கள்

டிவி மீது ரிமோட் எடுத்து அடித்துவிட்டு.. இப்போ அங்கேயே போய் சேர்ந்தது ஏன்.? -கமல்ஹாசன் விளக்கம்

click me!