குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்… எடப்பாடிக்கு அமைச்சர் காந்தி வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 30, 2022, 12:28 AM IST
Highlights

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் காந்தி விமர்சித்துள்ளார். 

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் காந்தி விமர்சித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் என்று எடப்பாடி பழனிசாமி ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் 19.11.2022 அன்று தலைமைச் செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகளின் தரத்தினையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான நான் உட்பட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விமானத்தில் பொறுப்பில்லாமல் எமர்ஜன்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்... செந்தில் பாலாஜி குறிப்பிடுவது யார்?

பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். 1 கோடியே 79 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும் மற்றும் ஏற்கனவே அதற்காக ரூபாய் 487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி சேமிப்பு… அண்ணாமலை தகவல்!!

இத்திட்டத்திற்குத் தேவையான வேட்டி சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு திட்டத்தினை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சரான தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை நம்பர் 1 இடத்திற்கு எடுத்துச் சென்று வாகை சூடியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்கு ஏதும் இல்லாமல் ஏதோ ஒரு அறிக்கையை மனம்போன போக்கில் வெளியிட்டுள்ளார். இனிமேலாவது பத்திரிகைகளையும், ஊடகங்களையும் பார்த்து அரசு செய்து வரும் சாதனைகளை உணர்ந்து அவர் அறிக்கை வெளியிட வேண்டும். இடைக்கால எடப்பாடி பழனிசாமி குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

click me!