
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காததை கண்டித்து திமுக சார்பில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி, மதுரை திருவாப்புடையார் கோவில் பகுதியில் ரேஷன் கடை (எண் 1437) அமைந்துள்ளது. இந்த கடையின் முன்பு திமுகவினர் இன்று காலை திரண்டனர். அங்கு ரேஷன் பொருட்களை தடையின்றி
வழங்க வேண்டும். எடை குறைவாக வழங்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட ரேஷன் கடையின் சில மீட்டர் தூரத்தில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ வீடு உள்ளது. இதனால், ரேஷன் கடையை முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர், அமைச்சரின் வீட்டை முற்றுகையிடலாம் என பேசப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அனைவரையும் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.