
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை முறையாக வழங்க வலியுறுத்தி தமிழகம் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ரேஷன் கடையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ரேஷன் கடைகளில் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்,
தொடர்ந்து பேசிய அவர், தற்போது, ரேஷன் கடைகளில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றும் தரமான பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
எப்போது ரேஷன் கடைக்குச் சென்றாலும் அரிசி இல்லை, பருப்பு இல்லை, பாமாயில் இல்லை என்று எதுமே இல்லை என்பதே இப்போதைய நிலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
ரேஷன் கடைகளுக்காக பொருட்களை இந்த அரசு கொள்முதல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார், ஆனால் ஏன் ரேஷன் கடையில் பொருட்கள் கிடைப்பதில்லை என கேள்வி எழுப்பினார்,
டாஸ்மாக் கடைகளில் மட்டுமே என்னென்ன சரக்கு இருக்கிறது என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் ரேஷன் கடைகளில் என்ன பொருட்கள் இருக்கிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிப் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.