
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து கடந்த வாரம், தேர்தல் ஆணையம் ஏப்ரல் 12ம் தேதி இடை தேர்தல் நடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரமடைந்துள்ளனர்.
அதிமுகவின் 3 அணிகளில் தீபா தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, அவர் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியில் ஓரிரு
நாட்களில் வேட்பாளரை அறிவிப்பதாக கூறியுள்ளனர்.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், திமுக சார்பில், ஆர்கே நகர் தொகுதியில் பேட்டியிடுவதற்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இன்று நேர்க்காணல் நடத்தப்படுகிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் க.அன்பழகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கான நேர்க்காணலை நடத்துகின்றனர். நேர்காணல் முடிவடைந்ததும், தி.மு.க. உயர்மட்டக்குழுவில் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.