
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கு பின்னர், திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், திடுக்கிடும் தகவலை கூறினார்.
திருவொற்றியூர் பகுதியில் அதிமுக சசிகலா அணியினரின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவித்துவிட்டது. இதையடுத்து நமது அணியினர், தீவிரமாக செயல்பட்டு, வெற்றிக்காக பாடுபட வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்.
அவர், மாயமாக மறையவும் அதிகளவில் வாய்ப்பு உள்ளது. அவர், அரசியலுக்கு வந்ததுக்கு பதில், சினிமாவுக்கு சென்று இருக்கலாம். நல்ல சிறந்த நடிகராக இருக்கிறார்.
அதேபோல், இடைத் தேர்தல் முடிந்ததும், திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் நமது பக்கம் வருகிறார்கள். எனது முன்னிலையில், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.