Udhayanidhi Stalin : உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும்.. எங்களின் விருப்பமும் அதுவே.. செந்தில் பாலாஜி

By Raghupati RFirst Published Dec 20, 2021, 6:56 AM IST
Highlights

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவே என்று கூறியிருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் மேற்கு நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு புதிதாக கட்சியில் சேர்வதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கும் பணியினை பார்வையிட்டு, புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பகுதிவாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் சுமார் 9 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  இதில், 3 லட்சம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்கப்பட உள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார். நடந்து முடிந்த தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் பயணித்து மக்களின் அன்பையும். பாசத்தையும் பெற்றவர். 

எனவே அவர் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது. திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தோல்வியின் காரணமாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு கருத்துக்களை அதிமுகவினர் பேசி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு 100 சதம் வெற்றியை மக்கள் தருவார்கள்.  இனி வரக்கூடிய காலங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

click me!