மாஃபா பாண்டியராஜனை முழு சங்கி என்ற திமுக தலைவர்... மு.க. ஸ்டாலின் தாறுமாறு விமர்சனம்..!

By Asianet TamilFirst Published Mar 22, 2021, 9:48 PM IST
Highlights

பாஜகவின் ஊதுகுழலாக அதிமுகவில் இருக்கும் மாஃபியா பாண்டியராஜனை ஆவடி தொகுதி மக்கள் துரத்தி அடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று திமுக பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது. இதேபோல தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார்.  அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ஆவடி தொகுதியில் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர்களையும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனையும் விமர்சனம் செய்து மக்கள் மத்தியில் பேசினார்.


 “இந்த ஆட்சியில் எல்லாம் அமைச்சர்களுக்கும் அடைமொழி இருக்கிறது. ஒரு அமைச்சரின் பெயர் ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’. செல்லூர் ராஜூவிற்கு ‘தெர்மாகோல் செல்லூர் ராஜூ’.  விருதுநகர் மாவட்டம் ராஜேந்திரபாலாஜிக்கு ‘பலூன் ராஜேந்திரபாலாஜி’. இப்படி ஒவ்வொருவருக்கும் பெயர் உள்ளது. இந்த ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. வாக்காளர்கள் மாஃபா பாண்டியராஜனை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவில் இருந்து கொண்டு பா.ஜ.க. வழியில் நடப்பவர். அவர் முழுமையான சங்கி. அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர், தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சர். அவர் அதிமுகவில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் நீக்கினார்? அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார். அதனால்தான் கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு அதிமுகவில் சேர்ந்தார். இப்போது பாஜகவின் ஊதுகுழலாக அதிமுகவில் இருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதி மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை.”என்று ஸ்டாலின் பேசினார்.
 

click me!