திமுக – பாஜக இடையே ரகசிய கூட்டணி இருக்கு…. பொது மேடையில் போட்டுடைத்த கராத்தே தியாகராஜன்….

By Selvanayagam PFirst Published Sep 11, 2018, 5:54 AM IST
Highlights

திமுக மற்றும் பாஜக இடையே  ரகசிய கூட்டணி ஏற்பட்டுள்ளதாகவும், இத்தனை நாள் காங்கிரசுடன் இருந்த நல்ல நட்பை ஸ்டாலின்  உடைக்க நினைக்கிறார் என தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன் ஓபனாக பேசியது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி நடத்தவிருந்தார். அவர் வருவதற்கு முன்பாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசினார்.

அப்போது,  திமுக நடத்தும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உட்பட பலர்  திரளாக பங்கேற்கின்றனர். ஆனால் காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட கலந்து கொள்வதில்லை என குற்றம்சாட்டி பேசினார்.

காங்கிரசுடனான  நட்பை ஸ்டாலின் விரும்பவில்லை என்று பேசிய தியாகராஜன், திமுக-பாஜக இடையே ரகசிய கூட்டணி ஏற்பட்டுள்ளதாகவும் ஓபனாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்று கராத்தே தியாகராஜன் பேசக் கூடாது  என  கூச்சலிட்டனர்.

இதனால் திமுக – காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. உடனடியாக அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில் கராத்தே தியாகராஜன் தைரியமாக உண்மையைச் சொன்னதாக அவரை காங்கிரஸ் தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.

click me!