திமுக கூட்டத்தில் நாங்க மட்டும் கலந்துக்கிறோம் !! ஆனா காங்கிரஸ் கூட்டத்திலே நீங்க கலந்துக்க மாட்டீங்களா !! கடுப்பான கராத்தே தியாகராஜன் !!

By Selvanayagam PFirst Published Sep 10, 2018, 11:08 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பேசிய தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், திமுக நடத்தும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கூட்டங்களுக்கு திமுகவினரை ஸ்டாலின்  அனுப்பி வைப்பதில்லை என கூறியதால் திமுக – காங்கிரஸ் தொண்டர்களிடையே  மோதல் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி நடத்தவிருந்தார். அவர் வருவதற்கு முன்பாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசினார்.

அப்போது திமுக நடத்தும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உட்பட பலர்  திரளாக பங்கேற்கின்றனர். ஆனால் காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட கலந்து கொள்வதில்லை என குற்றம்சாட்டி பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த  திமுகவினர் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்று கராத்தே தியாகராஜன் பேசக் கூடாது  என  கூச்சலிட்டனர். இதனால் திமுக – காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

உடனடியாக அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

click me!