
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஐயும் சசிகலாவுக்கு எதிராக திருப்பி விட்டவரே டி.டி.வி.தினகரன்தான் என்றும், இப்போது சசிகலா முன்பு அவர் நல்லவர் போல் நடிப்பதாகவும் திவாகரன் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்" என்று தினகரன் கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
மேலும் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார்.
திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது.. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார்.
அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திவாகரன் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா குடும்பத்தில் இருந்து நான் விடுப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது இந்த நிலை வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன் என கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஐயும் சசிகலாவுக்கு எதிராக திருப்பி விட்டவரே டி.டி.வி.தினகரன்தான் என்றும், இப்போது சசிகலா முன்பு அவர் நல்லவர் போல் நடிப்பதாகவும் திவாகரன் தெரிவித்தார்.
கண்டிப்பாக ஒரு நாள் சசிகலாவுக்கு இது புரியும், ஆனால் எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என திவாகரன் தெரிவித்தார்.