
பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த டிச.31ம் தேதி தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறினார் ரஜினி காந்த். இவ்வாறு தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பல தரப்பில் இருந்தும் கிளம்பியது.
ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த அதே நாளில், தனது ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்தார், ரஜினிக்கு நெருக்கமான இயக்குனர் விசு.
தற்போது உடல் நலம் பாதிக்கப் பட்டு வீட்டில் சிகிச்சையில் இருந்து வரும் விசு, அரசியல் களம் மட்டுமல்ல, சமூகத் தளத்திலும் சுறுசுறுப்பாக இயங்கியவர். மக்கள் மன்றம் என தனியார் டிவி., நிகழ்ச்சி மூலம் ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்தவர். தனது கருத்தை தைரியமாக முன் வைப்பவர். அதிமுக.,வில் இணைத்துக் கொண்டதன் மூலம் தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்த விசு, பின்னர் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார். தான் ஒரு ஆன்மிகவாதி என்பதால், ரஜினியின் அரசிய பிரவேசத்தை ஆன்மிகவாதி என்ற வகையில் வரவேற்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தனது பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது...
“கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி,
தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?!
காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சூப்பரா dance ஆடுமாம்... உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்! பொறாமை புடுங்கித் தின்னுமாம்...
அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு
கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம்...
ரஜினி நீ மயில்... மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி...
நீ ஆடு ராஜா ஆடு... உன் இறகால் நொந்து போன தமிழ்நாட்டு மக்களின் இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்... நன்றி ரஜினி நன்றி...!
- இயக்குநர் விசு”
என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விசு குறிப்பிட்டிருந்தார்.
விசு தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு முந்தைய பதிவாக, கமலுக்கு ஒரு விமர்சனம் பதிவிட்டிருந்தார். நவ.5ம் தேதி கமலுக்கு எழுதிய விமர்சனத்துக்குப் பின்னர் இப்போது ரஜினியின் அறிவிப்புக்கு விமர்சனம் செய்துள்ளார்.
மயிலாக ரஜினியைக் குறிப்பிடும் விசு, ரஜினியைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறு ஆட முயற்சி செய்கின்றனர் என்று நக்கலாகக் கூறியுள்ளார். அவர் குறிப்பிடுவது யாரை என்பது குறித்த விவாதமும் களைகட்டியது.